செய்திகள்

ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த தாம்பரம் அ.தி.மு.க. தொண்டர் பலி

Published On 2016-10-13 16:01 IST   |   Update On 2016-10-13 16:01:00 IST
ஜெயலலிதாவுக்காக தீக்குளித்த தாம்பரம் அ.தி.மு.க. தொண்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை:

தாம்பரம் கடப்பேரி மவுலானா நகரை சேர்ந்தவர் சற்குணம் (31). அ.தி.மு.க. தொண்டரான இவர் காவலாளியாக வேலை செய்து வந்தார்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதால் சற்குணம் மிகுந்த மன வருத்தத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் அடிக்கடி அவர் பேசி வந்தார்.

இந்நிலையில், நேற்று இரவு தாம்பரம் சானடோரியத்தில் ஏற்றுமதி வளாகம் அருகில், சற்குணம் மோட்டார் சைக்கிளில் வந்தார்.

திடீரென அவர் தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்தார். நடுரோட்டில் உடலில் தீபிடித்த நிலையில், முதல்-அமைச்சர் அம்மா விரைவில் குணம் அடைய வேண்டும் என்று கோ‌ஷமிட்ட படியே அங்குமிங்கும் ஓடினார்.

சற்குணம் தீக்குளித்த இடத்தின் அருகில் போக்குவரத்து சிக்னல் உள்ளது. அங்கு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று சற்குணத்தின் உடலில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இருப்பினும் அவரது உடல் கருகியது.

பலத்த காயங்களுடன், குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சற்குணம் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.

மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சற்குணம் கொண்டு செல்லப்பட்டார். நேற்று இரவு 8.15 மணி அளவில் கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட சற்குணத்தின் உடல் நிலை மோசமானது. அவரது உயிரை காப்பாற்ற டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவு 11 மணி அளவில் சற்குணம் பரிதாபமாக உயிரிழந்தார்.

சற்குணத்துக்கு ஷீலா என்ற மனைவியும், 4 வயதில் காயத்ரி என்கிற மகளும் உள்ளனர்.

Similar News