செய்திகள்

புவனகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2016-10-09 18:12 IST   |   Update On 2016-10-09 18:12:00 IST
புவனகிரி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரங்கிப்பேட்டை:

புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கமல், லாரி டிரைவர். இவரது மனைவி குமாரசெல்வி (வயது24). இவர்களுக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கமலுக்கும், குமாரசெல்விக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் கடந்த சில நாட்களாக குமாரசெல்வி மனமுடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமாரசெல்வி, சேலையால் தூக்கில் தொங்கினார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குமாரசெல்வி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குமாரசெல்வியின் தாய், புவனகிரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசன் வழக்குப்பதிவு செய்து குமார செல்வி குடும்ப தகராறு காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் குமாரசெல்விக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் சிதம்பரம் கோட்டாட்சியர் விஜயலட்சுமி மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News