செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1 3/4 கிலோ தங்கம் - வெளிநாட்டு பணம் பறிமுதல்: 3 பேர் கைது

Published On 2016-10-05 11:06 IST   |   Update On 2016-10-05 11:06:00 IST
சென்னை விமான நிலையத்தில் 1 3/4 கிலோ தங்கம், வெளிநாட்டு பணத்தை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 3.30 மணிக்கு குவைத்தில் இருந்து ஒரு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

ஆந்திரா மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த கிருஷ்ண வேணி என்பவர் மீது சந்தேகம் அடைந்து அவரை விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக கூறியதால் தனி அறையில் வைத்து சோதனை செய்தனர்.

அப்போது அவர் தனது உள்ளாடையில் தங்க பிஸ்கட்டுகள் மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.27 லட்சம். எடை 900 கிராம்.

இதே போல் நள்ளிரவு 12.30 மணிக்கு மலேசியாவில் இருந்து ஒரு விமானம் சென்னைக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்பவரை சோதனை செய்த போது அவர் சூட்கேசில் 3 தங்க பிஸ்கட்டுகளை மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தது தெரிய வந்தது. இதன் எடை 800 கிராம். மதிப்பு ரூ. 24 லட்சம்.

சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நள்ளிரவு 1.30 மணிக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சென்னையைச் சேர்ந்த முகமது யூசுப் என்பவரை சோதனை செய்தபோது அவரது கைப்பையில் அமெரிக்கா டாலர், யுரோ வெளிநாட்டு பணம் கட்டுகட்டாக இருந்தது தெரிய வந்தது.

விசாரணையில் அவர் டூரிஸ்ட் விசாவில் சிங்கப்பூர் செல்வது தெரிய வந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ.23 லட்சம்.

இந்த 3 சம்பவங்கள் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1ž கிலோ தங்கமும், வெளிநாட்டு பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News