செய்திகள்

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடி: 4 பேர் மீது வழக்கு

Published On 2016-09-27 16:28 IST   |   Update On 2016-09-27 16:28:00 IST
பண்ருட்டியில் வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி ஓட்டல் உரிமையாளரிடம் ரூ.8 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண்ருட்டி:

பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 49). இவர் பண்ருட்டி லிங்க் ரோட்டில் ஓட்டல் வைத்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த முஜிபுர் ரகுமான் என்பவர் பெருமாளிடம் வெளிநாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.8 லட்சத்தை பெற்றுக்கொண்டார்.

ஆனால் முஜிபுர் ரகுமான் சொன்னபடி வேலை வாங்கித்தரவில்லை. இதுகுறித்து அவரிடம் பெருமாள் கேட்டபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

சம்பவத்தன்று முஜிபுர் ரகுமான் வீட்டுக்கு பெருமாள் சென்றார். அவரிடம் தன்னுடைய பணத்தை திருப்பி தருமாறு கேட்டார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது முஜிபுர் ரகுமானின் குடும்பத்தினர் பெருமாளை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் பெருமாள் புகார் செய்தார். புகாரின்பேரில் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் கமல், மதினாபேகம், ரகிமா பீவி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

Similar News