பண்ருட்டியில் தீ விபத்து: 4 ஏக்கர் சவுக்குமரங்கள் எரிந்து சாம்பல்
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாச ரெட்டியார். இவருக்கு சொந்தமான நிலத்தில் ஏராளமான சவுக்குமரங்கள் இருந்தன.
நேற்று மாலை சவுக்குமரங்களுக்கு மேலே சென்ற மின்கம்பிகள் உரசியதால் தீப்பொறி பறந்தன. இதனால் அந்த மரங்கள் தீ பிடித்து எரிந்தது. 2 ஏக்கர் நிலப்பரப்பில் இருந்த சவுக்குமரங்கள் எரிந்து சாம்பலாகின.
இதேபோல் அதே பகுதியில் உள்ள அருணாசலம் என்பவருக்கு சொந்தமான சவுக்குமரங்களிலும் தீ பற்றியது. சிறிது நேரத்தில தீ அந்த பகுதி முழுவதும் பரவியது. இதில் அங்கிருந்த 2 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சவுக்குமரங்கள் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து பண்ருட்டி தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அதிகாரி செந்தில்குமார் தலைமையில் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.10 லட்சம் சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.