செய்திகள்

தேர்தல் விதி மீறல் வழக்கு: பண்ருட்டி கோர்ட்டில் வேல்முருகன் இன்று ஆஜர் - விசாரணை 17-ந் தேதிக்கு தள்ளிவைப்பு

Published On 2016-09-26 11:58 IST   |   Update On 2016-09-26 11:58:00 IST
2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் வேல்முருகன் பண்ருட்டி கோர்ட்டில் இன்று ஆஜர் ஆனார்
பண்ருட்டி:

2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது பண்ருட்டியில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக பா.ம.க.நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., நடிகர் நெப்போலியன் உள்பட 50 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை பண்ருட்டி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சரவணபாபு முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது. தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆஜர் ஆனார்.

ராமதாஸ் சபா.ராஜேந்திரன் எம்.எல்.ஏ. நடிகர் நெப்போலியன் ஆகியோர் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி மனுதாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையை வருகிற 17-ந் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு வெளியே வந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும்.

உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்றும், நாளையும் நெய்வேலியில் நடைபெறுகிறது.

கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தமிழக வாழ்வுரிமை கட்சி நிலைப்பாடு, கூட்டணி அமைக்கப்படுமா? யாருடன் கூட்டணி? ஆகியவை குறித்து நிர்வாகிகளிடம் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது நகர செயலாளர் ராஜமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் சிவக்குமார், சுரேஷ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பாலமுருகன், வக்கீல் செல்வராஜ், நகரசெயலாளர் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News