செய்திகள்

பெரியகுளம் அருகே வனப்பகுதியில் பயங்கர தீ

Published On 2016-09-20 11:52 IST   |   Update On 2016-09-20 11:52:00 IST
பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள தீயினால் விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாயின.

பெரியகுளம்:

தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனப்பகுதியில் வசிக்கும் யானைகள், காட்டெருமைகள், பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலையடிவார தோட்டப்பகுதிக்குள் புகுந்து சேதம் விளைவிக்கின்றன.

இந்நிலையில் பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அகமலை வனப்பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி பரவியது. வறட்சியான சூழலில் காற்று பலமாக வீசுவதால் தீ மளமளவென எரிகிறது.

இதனால் 200-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் அரியவகை விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாயின. வனப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.

வெப்பம் காரணமாக அந்த இடத்தை விட்டு வெளியேறிய வன விலங்குகள் மலையடிவார பகுதிகளில் உள்ள தோட்டங்களில் புகுந்துள்ளன. இதனால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்ல அச்சப்படுகின்றனர்.

எனவே அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் பரவி வரும் காட்டு தீயை அணைக்க போராடி வருகின்றனர்.

Similar News