செய்திகள்

உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2016-09-17 10:20 GMT   |   Update On 2016-09-17 10:20 GMT
உசிலம்பட்டி அருகே கோவில் உண்டியலை உடைத்து ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

உசிலம்பட்டி:

உசிலம்பட்டி அருகே உள்ள கவனம்பட்டியில் பிரபலமான வீரா கோவில் உள்ளது. பெரிய கோவிலான இங்கு, சுற்று வட்டார கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முடிகாணிக்கை செலுத்தியும், கிடா வெட்டியும் வீரபத்திரரை வழிபாடு செய்து வருகிறார்கள்.

நேற்று இரவு பூசாரி வீரணன், வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு கோவிலை பூட்டிச்சென்றார். இன்று காலையில் நடையை திறந்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த உண்டியலை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் மற்றொரு கதவை உடைத்து உள்ளே புகுந்து உண்டியலை பெயர்த்து எடுத்து சென்றது தெரியவந்தது.

அதை தூக்கிச்சென்ற கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டனர். பின்னர் அருகில் இருந்த பாழடைந்த கிணற்றில் உண்டியலை போட்டு விட்டு சென்றிருப்பதும் தெரிந்தது.

இதுபற்றி பூசாரி, உசிலம்பட்டி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News