செய்திகள்

வண்டலூர் பூங்காவில் வராக மான்கள்

Published On 2016-09-15 08:44 IST   |   Update On 2016-09-15 08:44:00 IST
திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வராக மான்கள், ரியா பறவைகள் கொண்டு வரப்பட்டன.
வண்டலூர்:

திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து வண்டலூர் பூங்காவுக்கு வராக மான்கள், ரியா பறவைகள் கொண்டு வரப்பட்டன.

வண்டலூர் பூங்கா இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விலங்குகள் பரிமாற்ற முறையில் வண்டலூர் பூங்காவுக்கு 4 ரியா பறவைகள், 6 வராக மான்கள் திருவனந்தபுரம் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இவற்றில் 2 வெள்ளை நிற ரியா பறவைகளும், 2 பழுப்பு நிற ரியா பறவைகளும், 3 ஆண் மற்றும் 3 பெண் வராக மான்களும் அடங்கும்.

இவற்றிற்கு பதிலாக வண்டலூர் பூங்காவில் இருந்து 4 வெள்ளை மயில்கள் (ஆண்-2, பெண்-2), 4 கட்ட உடல் மலைப்பாம்புகள் (ஆண்-2, பெண்-2) திருவனந்தபுரம் பூங்காவிற்கு கொடுக்கப்பட்டுள்ளன.

வண்டலூர் பூங்கா 1855-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ரியா பறவை முதன்முதலாக தற்பொழுதுதான் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உரிய நோய்த்தடுப்பு மருத்துவ நடவடிக்கைகளுக்குப் பிறகு ரியா பறவைகள் மற்றும் வராக மான்களை பார்வையாளர்கள் நேற்று முதல் பார்வையிடுகின்றனர்.

ரியா பறவை பறக்க இயலா பறவையாகும். தென் அமெரிக்காவை தாயகமாக கொண்ட இந்த பறவை, நெருப்புக்கோழி மற்றும் ஈமு போன்ற பறவைகளின் நெருங்கிய உறவினமாகும். இந்த பறவையில் பெரிய ரியா மற்றும் சிறிய ரியா என 2 இனங்கள் உள்ளன. நன்கு வளர்ந்த பெரிய ரியா 170 செ.மீ. உயரமும் 40 கிலோ வரை எடையும் இருக்கும்.

வராக மான் வட இந்தியா, பாகி்ஸ்தான், நேபாளம், வங்காளதேசம், சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளில் காணப்படுகிறது. தலையை தொங்கியவாறே ஓடும் இந்த மான் மற்ற மானினங்களை போல் தடைகளை தாவாமலும் குதிக்காமலும் அவற்றினூடே ஊர்ந்து செல்லும் இயல்பை உடையது. பன்றியை போன்ற உடலமைப்பும் செயல்பாடுகளும் இருப்பதால் இந்த மான் வராக மான் என்று அழைக்கப்படுகிறது.

அழிநிலை விலங்கினமான இந்த மான்கள் 17 முதல் 18 வயது வரை உயிர் வாழும். இந்த மானுடன் சேர்த்து இந்த பூங்காவிலுள்ள மானினங்களின் எண்ணிக்கை 6- ஆக உயர்ந்துள்ளது.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News