செய்திகள்

நெய்வேலி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி: தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 300 பேர் கைது

Published On 2016-09-13 13:20 IST   |   Update On 2016-09-13 13:20:00 IST
நெய்வேலி என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி:

காவிரி நீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தாக்கப்படும் தமிழர்களை காக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், கர்நாடகாவுக்கு நெய்வேலி என்.எல்.சி.யிலிருந்து மின்சாரம் அனுப்பக்கூடாது என்று தமிழக வாழ்வுரிமை கட்சியினர் என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருத்தனர்.

அதன்படி இன்று காலை அவர்கள் நெய்வேலி மத்திய பஸ் நிலையம் அருகே திரண்டனர். அங்கிருந்து என்.எல்.சி. அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாநில துணைபொதுச் செயலாளர் கண்ணன் ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் பஞ்சமூர்த்தி, சின்னதுரை முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்பாட்டத்துக்கு பின்னர் கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா உருவபொம்மையை எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அங்கிருந்து தடையை மீறி என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டனர். இதைத்தொடர்ந்து 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்த போராட்டத்தை யொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Similar News