வேப்பூரில் போலீஸ் நிலையம் அருகே 7 கடைகளில் கொள்ளை
வேப்பூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள வேப்பூரில் போலீஸ் நிலையம் அருகே தனியாருக்கு சொந்தமான வணிகவளாகம் உள்ளது. இதில் ஏராளமான கடைகள் உள்ளன.
இங்கு வேப்பூரை சேர்ந்த செல்வராஜ்(வயது 50) மளிகைகடை வைத்துள்ளார். நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் அவர் கடையை பூட்டி விட்டு சென்றார்.
நள்ளிரவில் சில மர்ம மனிதர்கள் அங்கு வந்தனர். கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த ரூ.30 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர். அங்கிருந்த மளிகை பொருட்களை ஒரு சாக்கில் கட்டினர்.
பின்னர் அவர்கள் செல்வராஜ் கடைக்கு அடுத்துள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போன் கடையின் பூட்டை அறுத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த செல்போன்களை கொள்ளையடித்தனர்.
இதைத்தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் என்பவரின் மருந்து கடை மற்றும் சித்திக்அலி என்பவரின் எலக்ட்ரிக் பொருள் விற்பனை கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளை அடித்தனர்.
இதேபோல் அதே பகுதியில் உள்ள ரமேஷ் என்பவரின் செல்போன் கடையிலும், அபாஸ் என்பரின் இரும்பு கடையிலும் மற்றும் ஒரு பேக்கரி கடையிலும் பூட்டுகளை அறுத்து உள்ளே புகுந்து அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.
இன்று காலை கடையை திறக்க வந்த வியாபாரி செல்வராஜ் தனது கடையில் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் கொள்ளை நடந்த மற்ற கடைகளின் வியாபாரிகள் மணிகண்டன், கிருஷ்ணன், சித்திக்அலி, ரமேஷ், அபாஸ் ஆகியோரும் அங்கு வந்தனர்.
கொள்ளைசம்பவம் குறித்து வேப்பூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து ரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். வணிக வளாகம் அருகே காட்டுப்பகுதி உள்ளது. கொள்ளையர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருப்பது தெரியவந்தது.
கடைகளில் உடைக்கப்பட்ட பூட்டுகளை வேப்பூர் பைபாஸ் ரோட்டில் கொள்ளையர்கள் வீசி சென்றிருந்தனர். அவைகளை போலீசார் கைப்பற்றினர். கொள்ளையர்கள் பழைய குற்றவாளிகளாக இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசார் அவர்களை பல்வேறு பகுதிகளில் தேடி வருகின்றனர்.
வேப்பூர் பகுதியில் தொடர்ந்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் போலீஸ் நிலையம் அருகே வணிக வளாகத்தில் ஒரே நாளில் 7 கடைகளில் கொள்ளை நடந்திருப்பது பொதுமக்களின் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளையர்களை பிடிக்க போலீசார் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.