செய்திகள்

சீர்காழி-வைத்தீஸ்வரன்கோவிலில் கர்நாடகா லாரி-ஜீப் கண்ணாடி உடைப்பு: டிரைவர் மீது தாக்குதல்

Published On 2016-09-12 11:28 IST   |   Update On 2016-09-12 11:28:00 IST
சீர்காழி மற்றும் வைத்தீஸ்வரன்கோவிலில் கர்நாடகா லாரி மற்றும் ஜீப் கண்ணாடி கண்ணாடிகளை உடைத்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீர்காழி:

காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக தமிழகம் மற்றும் கர்நாடகா விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் காவிரி நீர் பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்த தமிழகத்தை சேர்ந்த கல்லூரி மாணவரை கன்னடர்கள் தாக்கி உள்ள சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பெங்களூரில் இருந்து சிதம்பரத்திற்கு ஒரு லாரி வந்தது. இந்த லாரி நேற்று இரவு 10.30 மணியளவில் நாகை மாவட்டம் சீர்காழி செங்கமேடு பகுதி புறவழிச்சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதில் வந்தவர்கள் கர்நாடகா பதிவு எண் கொண்ட லாரி நிற்பதை கண்டதும் காரை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கிய 7 பேர் கொண்ட கும்பல் லாரி டிரைவரை தாக்கினர்.

மேலும் லாரியின் கண்ணாடிகளை உடைத்தனர். லாரி டிரைவர் நான் தமிழகத்தை சேர்ந்தவன் என்று கூறியதால் லாரியை எரிக்காமல் செல்வதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சீர்காழி டி.எஸ்.பி. வெங்கடேசன், இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த சக்தி (வயது 32) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் நாகை மாவட்ட எல்லை வரை பாதுகாப்பாக அழைத்துச்சென்றனர். பின்னர் அந்த லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இந்த நிலையில் சீர்காழி அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஒரு ஜீப் நிறுத்தபட்டிருந்தது. அதில் சுற்றுலா வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 13 பேர் அங்குள்ள ஓட்டலில் சாப்பிட சென்று விட்டனர். அப்போது அங்கு வந்த சிலர் கர்நாடகா பதிவு எண் கொண்ட ஜீப் நிற்பதை கண்டதும் அதன் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வைத்தீஸ் வரன்கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜீப்பில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் நாங்கள் தமிழக கோவில்களை தரிசிக்க வந்தோம். இனி ராமேஸ்வரம் கோவில் செல்ல வேண்டும் என்று கூறினர். இதை தொடர்ந்து கர்நாடகா பதிவு எண் பலகையை எடுத்துவிட்டு செல்லும்படி போலீசார் அறிவுறுத்தினர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக யாரும் புகார் செய்யததால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை.

இதையொட்டி நேற்று இரவு சீர்காழி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News