ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: விருத்தாசலத்தில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. அதிரடி விசாரணை
விருத்தாசலம்:
சேலத்தில் இருந்து விருத்தாசலம் வழியாக சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டியின் மேற்கூரையில் துளைபோட்டு அதில் இருந்த ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலம் மற்றும் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு பிரிவினர் விருத்தாசலத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருத்தாசலத்தில் சி.பி. சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரி தலைமையிலான போலீசார் சம்பவத்தன்று ரெயில் பணியில் இருந்த ரெயில் டிரைவர்கள், கார்டு, டிக்கெட் பரிசோதகர்கள் ஆகியோர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார்.
மேலும் சம்பவத்துக்கு ஒரு வாரத்திற்கு முன்பிருந்தும் சம்பவம் நடந்த அன்றிலிருந்தும் விடுப்பில் உள்ள ரெயில்வே ஊழியர்களின் தகவல்களை சேகரித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விருத்தாசலம் ஜங்ஷன் செல்லும் வழியில் உள்ள கடைகளின் உரிமையாளர்களிடமும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர்.
சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படையின் குற்றப்பிரிவு போலீசார் நேற்று விருத்தாசலம் வநதனர். சம்பவம் நடந்த அன்று ரெயில் நின்ற 1-வது பிளாட்பாரத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல திருச்சியில் இருந்தும் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் விருத்தாசலம் வந்தனர். ரெயில் நிலைய மேலாளர், துணை மேலாளர் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.
மேலும் ரெயில்வே துறையில் உள்ள 18 பிரிவுகளின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் தொலை பேசி எண்கள், அவர்களின் முகவரிகள் குறித்து கேட்டறிந்தனர்.
இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. டி.ஐ.ஜி. வித்யா ஜெயந்தி குல்ஹர்னி இன்று காலை விருத்தாசலம் வந்தார். நேரடியாக ரெயில் நிலையத்திற்கு வந்த அவர் கொள்ளை நடந்த ரெயில் நின்ற இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் சம்பவத்தன்று பணியில் ஈடுபட்டவர்கள் யார்-யார்? என்று விசாரித்தார். கொள்ளை தொடர்பாக சேகரிக்கப்பட்ட விவரங்களை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயகவுரியிடம் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து விருத்தாசலத்தில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகைக்கு சென்றார். அங்கு ரெயில்வே போலீஸ் அதிகாரிகள், சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் அதிகாரிகள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.
கொள்ளை தொடர்பாக தடயங்கள் ஏதேனும் சிக்கி உள்ளதா? என்று விசாரித்தார்.