பண்ருட்டி அருகே ஆசிரியர் அடித்ததால் விஷம் குடித்த 9-ம் வகுப்பு மாணவன்
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே உள்ள சிறுப்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதா. இவரது மகன் விக்னேஷ் (வயது 14). சேந்தநாடு பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தான். வீட்டில் யாரிடமும் பேசாமல் கவலையுடன் இருந்தான்.
இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது விஷம் குடித்து மயங்கி விழுந்தான். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விக்னேசை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இது குறித்து விக்னேசின் தந்தை ராதா பண்ருட்டி போலீசில் புகார் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-
நேற்று பள்ளியில் விக்னேசிடம் வகுப்பு ஆசிரியர் தேர்வு கட்டணம் கேட்டுள்ளார். இதற்கு விக்னேஷ் நாளை தருவதாக கூறியுள்ளான்.
இதனால் கோபம் அடைந்த ஆசிரியர் விக்னேசை அடித்துள்ளார். இதில் மனம் உடைந்த விக்னேஷ் விஷம் குடித்து விட்டான். எனவே ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறியுள்ளார்.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.