செய்திகள்

புதிய கல்வி கொள்கை பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்: நாராயணசாமி பேட்டி

Published On 2016-08-12 14:32 IST   |   Update On 2016-08-12 14:33:00 IST
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.

ஆலந்தூர்:

புதுவை முதல்வர் நாராயணசாமி நேற்று இரவு டெல்லியில் இருந்து சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுச்சேரி மாநிலம் சட்டமன்ற கூட்டத்தொடர் பட்ஜெட்டை நிர்ணயிப்பதற்காக உள்துறை அமைச்சர் மற்றும் நிதி அமைச்சரை சந்தித்து பேசினேன்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக நிதி வேண்டும் என்று கோரியுள்ளோம். அவர்கள் செய்து கொடுப்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள். அதற்கான ஒப்புதல் இரண்டு அல்லது மூன்று நாள்களில் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.

சட்டமன்ற கூட்டத் தொடரை கூட்டுவதற்கான தேதி நாளைய தினம் அமைச்சர்களுடன் ஆலோசித்து குறிப்பிடப்படும்.

ரெயில்வே துறை மந்திரி சுரேஷ் பிரபுவை சந்தித்து புதுச்சேரி மாநிலத்துக்குரெயில்வே திட்டங்கள் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்.

காரைக்கால் அகலப்பாதை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. அதை முடித்து தர அதற்காக முழு தொகையை ரெயில்வே துறையே ஏற்றுக் கொண்டுள்ளது.

அதே போல் புதுவையில் இருந்து ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்துக்கு புதிய ரெயில்கள் விட வேண்டும் என்று கேட்டு உள்ளோம்.

ரெயிலில் புதுவையில் இருந்து சென்னைக்கு பயணம் செய்ய 4½ மணி நேரம் முதல் 5 மணி நேரம் ஆகிறது. இதை 2 மணி நேரமாக குறைந்த அதிவேக ரெயில் சேவை வேண்டும். மேலும் இப்போது ஓடி கொண்டிருக்கும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க வேண்டும்.

புதுச்சேரி ரெயில் நிலையத்தை நவீனப்படுத்த வேண்டும் என கோரிக்கைகளை வைத்துள்ளேன். இதை நிறைவேற்றி தருவதாக நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரி துறை முகத்துக்காக கப்பல் மூலம் கண்டெய்னர் இறக்குவதற்கு ஒப்பந்தம் ஏற்படுத்தி உள்ளோம். அதற்காக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வருகிற 22-ந் தேதி ஒரு விழாவில் கலந்து கொள்ள இங்கு வருகிறார். அப்போது ஒப்பந்ததத்தில் கையெழுத்திட இருக்கிறோம்.

மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை சந்தித்து புதுச்சேரிக்கு இந்திய இண்டஸ்டிரிஸ் ஆப் மேனேஜ்மெண்ட் வேண்டும் என்று கோரிக்கை வைத்து உள்ளேன். அதை அவர் கவுன்சிலிங்குக்கு அனுப்பி முடிவு எடுப்பதாக கூறி உள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை பல மாநிலங்கள் எதிர்க்கிறது. ஏனென்றால் 3 முக்கிய அம்சங்கள் உள்ளது. சிறுபான்மையினர் நடத்தும் கல்வி கூடங்களுக்கு சலுகைகள் உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ளது. அதை புதிய கல்வி கொள்கையில் நீக்கி உள்ளனர்.

சமஸ்கிருதத்தை கட்டாய மாக்குவது, உடற்பயிற்சிகளை கட்டாயமாக்குவது இதையெல்லாம்தான் பலர் எதிர்க்கிறார்கள். புதுவை மாநிலத்தின் முடிவு பற்றி கலந்து ஆலோசித்து பின்பு அனுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News