குன்றத்தூர் அருகே காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை
ஸ்ரீபெரும்புதூர்:
திருக்கழுக்குன்றத்தை அடுத்த அரியகுன்றத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சசிக்குமார் (வயது 32). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இவருக்கும் எச்சூர் கிராமத்தை சேர்ந்த மேகா மகள் சத்யாவுக்கும் (22) காதல் ஏற்பட்டது. இருவரும் உறவினர்கள் ஆவர்.
கடந்த 2 ஆண்டுகளாக அவர்கள் காதலித்து வந்தனர். முறை தவறிய அவர்களது காதல் விவகாரம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெற்றோருக்கு தெரிந்தது. சசிக்குமார்-சத்யாவை பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் வாழ்க்கையில் ஒன்று சேர முடியாது என்று நினைத்து காதல் ஜோடி கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை உறவினர்கள் தேடி வந்தனர். இது பற்றி திருக்கழுக்குன்றம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் குன்றத்தூர் அருகே வண்டலூர் செல்லும் சாலை முட்புதரில் சசிக்குமாரும், சத்யாவும் பிணமாக கிடந்தனர். அவர்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. தகவல் அறிந்ததும் சோமங்கலம் போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.