செய்திகள்

தாம்பரம் அருகே கள்ளக்காதல் தகராறில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை

Published On 2016-08-10 09:24 IST   |   Update On 2016-08-10 09:25:00 IST
கள்ளக்காதல் தகராறில் கழுத்தை அறுத்து பெண் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அந்த பெண்ணின் அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தாம்பரம்:

சென்னையை அடுத்த சித்தாலப்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஞானசேகர் என்ற சேகர் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவருக்கு சரளா என்ற மனைவியும், பிரபாகரன் என்ற மகனும், சித்ரா என்ற மகளும் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகே சரளாவின் தங்கை பாலாமணி (38), கணவர் ஸ்டாலின் குழந்தைகள் கிஷான்ராஜ், திரிசா ஆகியோருடன் வசித்து வந்தார்.

பாலாமணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு ஏற்பட்ட தகராறில் பாலாமணியை விட்டு அவரது கணவர் ஸ்டாலின் பிரிந்து சென்று விட்டார்.

இதன் பிறகு மனைவியின் தங்கை பாலாமணிக்கு ஞானசேகர் அடைக்கலம் கொடுத்தார். அப்போது இருவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இதில் இருவரும் கணவன்- மனைவி போல வாழ்ந்தனர்.

பாலாமணியை சித்தாலப்பாக்கத்தில் இருந்து தாம்பரம் அருகே முடிச்சூர் வரதராஜபுரம் பெரியார் நகர் 3-வது தெருவில் தனியாக வீடு எடுத்து ஞானசேகர் குடித்தனம் வைத்தார். அவருக்கு அதே பகுதியில் மளிகைக்கடையும் வைத்து கொடுத்தார்.

மளிகைக்கடையில் பாலாமணி இருந்தபோது அந்த பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வாலிபருடன் பாலாமணி அடிக்கடி போனில் பேசியுள்ளார்.

இது ஞானசேகருக்கு தெரியவந்தது. அவர் பாலாமணியை கண்டித்தார். ஆனால் அதன் பிறகும் தொடர்ந்து வாலிபருடன் பாலாமணி பேசிவந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு ஞானசேகர் பெரியார் நகருக்கு சென்று பாலாமணியுடன் தங்கினார். இரவில் இருவரும் மது அருந்தினர். குடிபோதையில் ஞானசேகர் பாலாமணியிடம், ‘வேறுவாலிபருடன் தொடர்பு வைத்திருக்கிறாயே’ என கேட்டு கண்டித்ததாக தெரிகிறது.

அப்போது பாலாமணி ‘அப்படித்தான் தொடர்பு வைத்துக் கொள்வேன்’ என கூறினார். இதில் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த ஞானசேகர் அரிவாளால் பாலாமணி கழுத்தில் வெட்டியதாக தெரிகிறது. இதில் கழுத்து அறுபட்டு ரத்தவெள்ளத்தில் பாலாமணி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

நேற்று காலையில் ஞானசேகர் பாலாமணி பிணத்தை வீட்டில் போட்டு விட்டு முடிச்சூர் பகுதியில் சுற்றிக்கொண்டிருந்தார். காலையில் நீண்ட நேரமாகியும் கடை திறக்காததால், அப்பகுதி மக்கள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அங்கு பாலாமணி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடப்பதை பார்த்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பாலாமணி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது முடிச்சூர் பெட்ரோல் பங்க் அருகே சுற்றிக்கொண்டிருந்த ஞானசேகரனை கைது செய்தனர்.

Similar News