செய்திகள்

அம்மாப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண் காரில் கடத்தல்: கணவர் போலீசில் புகார்

Published On 2016-08-06 16:40 IST   |   Update On 2016-08-06 16:40:00 IST
அம்மாப்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்தி சென்றதால் மீட்டு கொடுக்கும்படி கணவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

அம்மாபேட்டை:

சேலம் மாவட்டம் கோனேரிபட்டி செட்டியார் தெருவை சேர்ந்தவர் வீரப்பன் மகன் சதீஷ் என்கிற பெரியண்ணன் (வயது 32). திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரி பஸ் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

ஈரோடு மாவட்டம் அம்மா பேட்டை அருகே உள்ள முரளி சித்த தாண்டனூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி இவரது மகள் நவீனா. இவரும் பெரியண்ணன் வேலை செய்யும் கல்லூரியில் பி.இ. படித்து வந்தார். இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாகி மாறியது.

இதை தொடர்ந்து இவர்கள் இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதத்துக்கு முன்பு ஈரோடு திண்டல் மலை வேலாயுதசாமி கோவிலில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பிறகு அவர்கள் மேட்டூர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். இருவரும் அம்மாபேட்டை அருகே உள்ள கல்பாரி தொட்டிபாளையம் என்ற பகுதியில் உள்ள பெரியண்ணனின் அக்கா சாந்தி வீட்டில் வசித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று  வீட்டில்  பெரியண்ணனும் நவீனா மட்டும் இருந்தனர். நவீனா பழம் வேண்டும் என கணவர் பெரியண்ணனிடம் கூறினார். அவரும் பழம் வாங்க சித்தார் சென்று விட்டார்.

அப்போது அங்கு வந்த சிலர் ஒரு காரில் வந்து வீட்டில் தனியாக இருந்த நவீனாவை கடத்தி சென்று விட்டனர்.

வெளியில் சென்று விட்டு வீட்டுக்கு வந்த பெரியண்ணன் நவீனா வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கம் விசாரித்ததில் ஒரு காரில் வந்த கும்பல் நவீனாவை கடத்தி சென்று விட்டதாக கூறினர்.

இது குறித்து பெரியண்ணன் அம்மா பேட்டை போலீசில்புகார் செய்தார்.

அதில் பூதப்பாடியை சேர்ந்த நவீனாவின் சித்தப்பா கார்த்தி மற்றும் அடையாளம் தெரியாத சிலர் தனது மனைவி நவீனாவை கடத்தி சென்று விட்டதாக கூறி உள்ளார்.

இது குறித்து அம்மாபேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்குபதிவு செய்து கடத்தப்பட்டதாக கூறப்படும் புதுப்பெண் நவீனாவை தேடி வருகிறார்.

Similar News