செய்திகள்

முதியவரை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கொள்ளை: 10 ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி துணிகரம்

Published On 2016-07-26 14:50 IST   |   Update On 2016-07-26 14:50:00 IST
வங்கியில் இருந்து பணத்தை எடுத்து வந்தபோது முதியவரை ஏமாற்றி ரூ.45 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாம்பரம்:

மேற்கு தாம்பரம் மூகாம்பிகை நகர் 2-வதுதெருவைச் சேர்ந்தவர் நீதிமணி (வயது68). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.

நேற்று மதியம் இவர் தனது மொபட்டில் தாம்பரத்தில் உள்ள வங்கிக்கு சென்று நகைகளை அடகு வைத்து ரூ. 45 ஆயிரம் வாங்கினார். பணத்தை கைப்பையில் வைத்து மொபட்டில் தொங்க விட்டப்படி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

தாம்பரம் மார்க்கெட் அருகே அழகேசன் சாலையில் செல்லும்போது ரோட்டில் நின்ற வாலிபர் ஒருவர் நீதிமணியிடம், “உங்கள் பணம் ரோட்டில் சிதறி கிடக்கிறது” என்று கூறினார்.

உடனே நீதிமணி மொபட்டை நிறுத்தி விட்டு கீழே சிதறி கிடந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொண்டு இருந்தார்.

அப்போது அந்த வாலிபர் மொபட்டில் தொங்கி விட்ட பணப்பையை எடுத்து கொண்டு ஓடினான்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிமணி கூச்சல் போட்டார். அதற்குள் வேறு ஒரு வாலிபர் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார்.

வங்கியில் இருந்து நீதிமணி பணத்தை எடுத்து வருவதை நன்கு நோட்டமிட்டு அவரிடம் ரூபாய் நோட்டு கீழே கிடப்பதாக கூறி அவரது கவனத்தை திசை திருப்பி இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து நீதிமணி தாம்பரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Similar News