செய்திகள்

கள்ளக்காதல் தகராறில் காவலாளிக்கு கத்தி குத்து: 2 பேர் கைது

Published On 2016-07-25 14:14 IST   |   Update On 2016-07-25 14:14:00 IST
பெருங்குடியில் கள்ளக்காதல் தகராறில் காவலாளியை கத்தியால் குத்திய 2 வாலிபர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
திருவான்மியூர்:

பெருங்குடியில் உள்ள குப்பை கிடங்கில் காவலாளியாக இருப்பவர் ஆனந்த். இவரது சொந்த ஊர் வந்தவாசி.

நேற்று மாலை அவர் பணியில் இருந்த போது 2 வாலிபர்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை சரமாரியாக குத்தினர். அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் 2 வாலிபர்களையும் மடக்கி பிடித்து துரைப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர்.

மேலும் படுகாயம் அடைந்த ஆனந்தை மீட்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிடிபட்ட 2 வாலிபர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மந்தவெளியை சேர்ந்த நவீன், ஞானசவுந்தர் என்பதும், கள்ளக்காதல் தகராறில் ஆனந்தை கொலை செய்ய முயன்றதும் தெரிந்தது.

ஆனந்துக்கும், மந்தவெளியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த பெண்ணின் மகன் கண்டித்தும் கேட்கவில்லை. இதனால் அந்த பெண்ணின் மகனின் திட்டப்படி அவர்கள் கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News