திருப்போரூர் பஸ்நிலைய மேற்கூரையில் அந்தரத்தில் தொங்கிய தொழிலாளி
திருப்போரூர்:
திருப்போரூர் பஸ் நிலையத்தில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. பழைய பஸ் நிலைய கூரையின் முன்புறம் பெயிண்ட் அடிக்கும் பணிகள் நடைபெற்றது.
சுமார் 30 அடி உயரத்தில் சாரம் அமைத்து 3 தொழிலாளர்கள் இதில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென சாரம் சரிந்து கீழே விழுந்தது. அதில் நின்று வேலை செய்து கொண்டிருந்தவர்களில் 2 பேர் அலறியபடி கீழே விழுந்து லேசான காயத்துடன் தப்பினர்.
ஒருவர் மட்டும் மேற்புற கூரையை பிடித்துக்கொண்டு அந்தரத்தில் தொங்கி அலறினார். இதனால் பஸ்நிலைய பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் பெரிய ஏணியை கொண்டு வந்து அதன்மூலம் அந்தரத்தில் தொங்கிய தொழிலாளியை பத்திரமாக மீட்டனர்.
சாரத்தில் பழைய கம்புகளை பயன்படுத்தியதால் பளு தாங்காமல் உடைந்தது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக 3 தொழிலாளர்களும் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.
உயரமான பகுதியில் வேலை செய்யும்போது அதற்கென பாதுகாப்புடன் பணி செய்வதை ஒப்பந்தக்காரருக்கு அறிவுறுத்தி அதிகாரிகள் கண்காணிக்கவேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தால் பஸ் நிலைய வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.