செய்திகள்

நீலாங்கரை அருகே அடகு கடையில் உரிமையாளரை கத்தியால் குத்தி கொள்ளை முயற்சி

Published On 2016-07-24 13:04 IST   |   Update On 2016-07-24 13:04:00 IST
நீலாங்கரை அருகே அடகு கடையில் உரிமையாளரை கத்தியால் குத்தி கொள்ளையடிக்க முயன்ற வாலிபர்கள் பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினர்.

திருவான்மியூர்:

நீலாங்கரையை அடுத்த பனையூரைச் சேர்ந்தவர் மனோஜ். உத்தண்டி கிழக்கு கடற்கரை சாலையில் அடகு கடை வைத்துள்ளார்.

நேற்று காலை மனோஜின் தம்பி சுரேஷ் அடகு கடையில் இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் நகையை அடகு வைக்க வேண்டும் என்றனர். அவர்களிடம் சுரேஷ் நகை குறித்து விவரம் கேட்டார்.

திடீரென 3 வாலிபர்களும் சுரேசை சரமாரியாக தாக்கினர். மேலும் ஒருவன் கத்தியால் அவரை கையில் குத்தினான். அதிர்ச்சி அடைந்த சுரேஷ் 3 பேரையும் தள்ளி விட்டு கடையில் இருந்து வெளியே வந்து கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். உடனே 3 வாலிபர்களும் மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் அடகு கடையில் இருந்த சுமார் ரூ. 50 லட்சம் மதிப்பிலான நகைகள் தப்பியது.

இதுகுறித்து கானாத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையில் இருந்த கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களின் உருவம் பதிவாகி இருந்தது. அவர்களை பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News