செய்திகள்

எனக்கு எதிராக சோனியாவிடம் கொடுத்த மனுவில் போலி கையெழுத்துகள்: திருநாவுக்கரசர் பேட்டி

Published On 2016-07-20 08:16 IST   |   Update On 2016-07-20 08:16:00 IST
எனக்கு எதிராக சோனியாவிடம் கொடுத்த மனுவில் போலி கையெழுத்துகள் போடப்பட்டு உள்ளன என்று திருநாவுக்கரசர் தெரிவித்தார்.
ஆலந்தூர்:

காங்கிரஸ் கட்சியின் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேட்டியளித்தபோது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் போராட்டத்தில் கலந்துகொள்வதற்காக டெல்லி செல்கிறேன். தமிழக காங்கிரசில் புதிய தலைவராக யாரை நியமிப்பது என்பது பற்றி சோனியாகாந்தி, ராகுல்காந்தி, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்கள் ஆகியோர் தமிழக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விரைவில் புதிய தலைவரை சோனியாகாந்தி அறிவிப்பார். தலைவராக யாரை அறிவித்தாலும் அவருக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. அதை பலப்படுத்தி வலிமையான கட்சியாக மாற்றுவோம்.

எனக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி தரக்கூடாது என சோனியாகாந்திக்கு 39 மாவட்ட தலைவர்கள் கையெழுத்திட்ட மனு அளித்து இருப்பதாக தகவல்கள் வந்தன. அந்த மனுவில் உள்ள கையெழுத்துகள் போலியானது.

முதல் பக்கத்தில் உள்ள 3 கையெழுத்து மட்டுமே உண்மையானது. மற்றவைகள் அனைத்தும் போலியானது. பல்வேறு விவகாரத்தில் வாங்கிய கையெழுத்தை இதில் இணைத்து இருப்பதாக மாவட்ட தலைவர்கள் மறுத்து கூறுகின்றனர்.

என் மீது இதுவரை எந்த ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. அ.தி.மு.க., மற்றும் பா.ஜனதா கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தார் என்று மட்டும்தான் கூறமுடியும்.

கட்சி மாறி பதவிகளை பெறுவது சகஜம். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இளங்கோவன் எனக்கு நெருங்கிய நண்பர். இப்போதும் அவர் எனக்கு நண்பர் தான். அதில் சந்தேகம் இல்லை.

இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.

மேலும், “சட்டசபை தேர்தலில் பலருக்கு சீட் வாங்கி தருவதாக கூறி கோடிக்கணக்கில் இளங்கோவன் மோசடி செய்தாகவும், அதனால் தான் தலைவர் பதவி பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறதே” என்று நிருபர் ஒருவர் கேட்டார்.

அதற்கு பதிலளித்த திருநாவுக்கரசர் “இதுபோன்று தவறான பிரசாரம் செய்து ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்துவது சரியல்ல. எந்தவித ஆதராமும் இல்லாமல் எங்களில் ஒருவர் மீது குற்றம்சாட்டுவதை நான் ஏற்கமாட்டேன்” என்று கூறினார்.

Similar News