செய்திகள்

பர்கூர் மலைப்பகுதியில் பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை யானை

Published On 2016-07-19 15:38 IST   |   Update On 2016-07-19 15:38:00 IST
பர்கூர் மலைப்பகுதியில் பொதுமக்களை பயமுறுத்தும் ஒற்றை யானையால் வனப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.
அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனப்பகுதியையொட்டி உள்ளது பர்கூர் வனப்பகுதி. இந்த பகுதியில் ஊரையொட்டி உள்ள ரோட்டோரம் பலாபழம் மரங்கள் உள்ளன. இந்த பலா பழங்களை சாப்பிட யானைகள் அடிக்கடி ஊருக்குள் புகும். பொதுமக்கள் மற்றும் வனத்துறையின் நடவடிக்கையால் யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு ஒற்றை யானை பர்கூர் மலையில் உள்ள பெஜலிட்டி தேவர்மலை, வெள்ளிமலை, ஊசிமலை, மடம் ஆகிய வன கிராமங்களுக்குள் புகுகிறது.

இந்த ஒற்றை யானை மாலை 6 மணிக்கெல்லாம் ஊருக்குள் புகுந்து விடுகிறது. தாழ்வாக உள்ள மரத்தில் காய்த்து தொங்கும் பலாபழங்களை தனது துதிக்கையால் பறித்து கீழே போட்டு உடைத்து சுளைகளை மட்டும் லாவகமாக எடுத்து சுவைக்கிறது.

மாலை நேரத்தில் புகும் யானை அதிகாலை 5 மணியளவில் தான் மீண்டும் காட்டுக்குள் புகுகிறது. அதன் பிறகு மாலை 6 மணிக்குகெல்லாம் மீண்டும் அந்த ஒற்றை யானை ஊருக்குள் புகுந்து விடுகிறது.

தினமும் ஒவ்வொரு வனக் கிராமத்துக்கு செல்லும் இந்த யானையால் வனப்பகுதி மக்கள் மிகவும் அச்சத்துடன் உள்ளனர்.

இதனால் இந்த யானை ஊருக்குள் புகாமல் இருக்க உடனடியாக நடவடிக்கை எடுத்து யானையிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என பொதுமக்கள் வனத்துறையினரை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News