செய்திகள்

குரோம்பேட்டை பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவனுக்கு கை முறிவு: ஆசிரியர் தாக்கியதாக புகார்

Published On 2016-07-19 14:13 IST   |   Update On 2016-07-19 14:14:00 IST
குரோம்பேட்டை பள்ளியில் 4-ம் வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்:

குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் திருமலைநகர் பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ஆதிலட்சுமி. இவர்களது மகன் கோவர்தன். மகள் ஸ்ரீநிதி. அங்குள்ள தனியார் பள்ளியில் கோவர்தன் 4-ம் வகுப்பும், ஸ்ரீநிதி 3-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

கடந்த சனிக்கிழமை மாணவன் கோவர்தன் கீழே விழுந்ததில் கை வீங்கி உள்ளது என்று பள்ளியில் இருந்து சுதாகருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே மகனை குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். பரிசோதனையில் கோவர்தனின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது தெரிந்தது.

இதுபற்றி மாணவனிடம் கேட்டபோது, பள்ளி விளையாட்டு ஆசிரியர் மணிகண்டன் கீழே தள்ளி விட்டதால் கைமுறிவு ஏற்பட்டதாகவும், யாரிடமும் இதுபற்றி சொல்லக் கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்தான்.

இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் சுதாகர் புகார் செய்தார். அதன்பின் சிட்லபாக்கம் போலீசில் புகார் செய்தார். அதில், ஆசிரியர் மணிகண்டன் தாக்கியதில் தனது மகன் கோவர்தன் கையில் முறிவு ஏற்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இதையடுத்து ஆசிரியர் மணிகண்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News