செய்திகள்

சாலையோரம் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட வழக்கில் நேபாள வாலிபர் மனைவியுடன் கைது

Published On 2016-07-17 08:19 IST   |   Update On 2016-07-17 08:19:00 IST
சிட்லபாக்கத்தில் சாலையோரம் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட வழக்கில், நேபாள வாலிபர் மனைவியுடன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
தாம்பரம்:

சென்னையை அடுத்த சிட்லபாக்கம், லெனின் தெரு சாலையோரத்தில் கடந்த 11-ந் தேதி பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்தது. அந்த குழந்தையின் உடலை சில நாய்கள் கடித்து குதறிக்கொண்டிருந்தன. இதை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பிறந்து சில மணி நேரமே ஆன அந்த குழந்தை, துப்பட்டாவால் சுற்றப்பட்ட நிலையில் இருந்தது. நாய்கள் கடித்து குதறியதில் குழந்தையின் கால் துண்டாகி இறந்த நிலையில் கிடந்தது. இதுகுறித்து சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையை வீசிச்சென்றது யார்? என்று தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குழந்தையை வீசி சென்றதாக சிட்லபாக்கம், திருமங்கை மன்னா தெருவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணிபுரியும் ராம் பகதூர் (வயது 26), அவரது மனைவி சாந்தி (25) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ராம் பகதூருக்கு ஏற்கனவே ஆறு வயதில் ஒரு மகனும், ஒன்றரை வயதில் மகளும் உள்ளனர். இந்த நிலையில் தனக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் கணவன், மனைவி இருவரும் குழந்தையை ரோட்டில் வீசி சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Similar News