செய்திகள்
கடலூர் அருகே சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து வந்த சிறுவன் தப்பி ஓட்டம்
கடலூர் அருகே சீர்திருத்த பள்ளிக்கு அழைத்து வந்தபோது தப்பி ஓடிய சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.
கடலூர்:
விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் பகுதியில் நடந்த திருட்டு வழக்கு தொடர்பாக ஆரோவில் போலீசார், வானூர் தாலுகா திருச்சிற்றம்பலம் காவேரி நகரை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர்.
இதையடுத்து அந்த சிறுவனை கடலூர் சாவடியில உள்ள சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு போலீஸ் ஏட்டு மாரிமுத்து, போலீஸ்காரர் கொடிகாத்தகுமரன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்தனர்.
கடலூர் சாவடி சந்திப்பில் வந்தவுடன் அங்குள்ள ஒரு கடையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு போலீசார் இருவரும் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்த சிறுவனை காணவில்லை.
அவன் போலீசாரின் கவனத்தை திசை திருப்பி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி இருப்பது தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவுசெய்து தப்பி ஓடிய சிறுவனை வலைவீசி தேடி வருகிறார்கள்.