செய்திகள்

கோபி அருகே வீட்டுக்குள் கார் புகுந்தது:ஒருவர் பலி – 3பேர் படுகாயம்

Published On 2016-07-15 14:27 IST   |   Update On 2016-07-15 14:27:00 IST
கோபி அருகே கார் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வீட்டுக்குள் புகுந்தது.

கோபி:

ஈரோடு மாவட்டம் வாய்க்கால் ரோடு ராமர் வீதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 42) கூலி தொழிலாளி.

நேற்று இரவு 9 மணி அளவில் இவரும் இவரது நண்பர்களும் வீட்டு முன்நின்று கொண்டு பேசி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் வேகத்தடை மீது ஏறி இறங்கிய போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடி செல்வராஜ் வீட்டுக்குள் புகுந்தது.

இதில் அங்கு நின்று பேசி கொண்டிருந்த செல்வராஜ் மீது மோதியதில் அவர் படுகாயம் அடைந்து துடித்தார்.

உடனடியாக அவரை கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து பிறகு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

அந்த காரில் வந்த வெங்கட்ராமன் (56) என்பவரும் அவரது பேத்தி அமிர்தவர்ஷிணி (5) கார் டிரைவர் கோபியை சேர்ந்த சுப்பிரமணியன் (45) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்து நடந்த இடத்தில் வழக்கம்போல் இரவு 9 மணி வரை அந்த பகுதி சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பார்கள் நேற்று நல்ல வேளையாக யாரும் விளையாடவில்லை. இந்த விபத்து குறித்து போலீஸ்– சப் இன்ஸ்பெக்டர் சாரதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News