செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை சதுப்பு நில மான் முதன்முறையாக குட்டி ஈன்றது

Published On 2016-07-11 08:17 IST   |   Update On 2016-07-11 08:17:00 IST
வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை சதுப்பு நில மான், முதன் முறையாக குட்டி ஈன்றது.
வண்டலூர்:

வண்டலூர் உயிரியல் பூங்காவில் அரிய வகை சதுப்பு நில மான், முதன் முறையாக குட்டி ஈன்றது.

சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் அரிய வகை சதுப்பு நில மான் ஒன்று கடந்த 25-ந்தேதி ஒரு ஆண் குட்டியை ஈன்று உள்ளது. சதுப்பு நில மான், இந்த பூங்கா தொடங்கப்பட்டதில் இருந்து குட்டி போடுவது இதுவே முதன்முறையாகும்.

புதிதாக பிறந்த அந்த மான் குட்டியுடன் சேர்த்து வண்டலூர் பூங்காவில் உள்ள சதுப்பு நில மான்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 6 ஆண் மான்கள், 8 பெண் மான்கள் அடங்கும்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இமயமலை அடிவாரம் முதல் தெற்கே கோதாவரி ஆறு வரையும், கிழக்கே சுந்தரவன காடுகள் முதல் மேற்கே சிந்து நதி வரையும் சதுப்பு நில மான்கள் காணப்பட்டன. தற்போது மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம் போன்ற மாநிலங்களிலும், நேபாளத்திலும் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

மேற்கு வங்காளம் மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் காணப்பட்ட இந்த உயிரினம் தற்போது அழிந்து விட்டது. பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலும் இந்த உயிரினம் அழிந்துவிட்டது.

கொம்பு உதிரும் மான் வகையைச் சேர்ந்த இவை, கொம்பில் மூன்றுக்கும் அதிகமான கிளைகளை உடையதால் மற்ற இந்திய மான்களில் இருந்து சிறப்புடையதாக விளங்குகிறது. கொம்பில் 12 கிளைகள் இருப்பதால் பாராசிங்கா என்றும் அழைக்கப்படுகிறது.

அரிய வகையான இந்த வகை மான்கள் சதுப்பு நிலங்களில் மட்டுமே வாழ்கின்றன. நீருக்கு அடியில் வளரும் புல் வகைகளை மேயும் இயல்பை உடையது. பெண் 2 முதல் 3 வயதிலும், ஆண் 4 வயதிலும் பருவ வயதை எட்டும். சினைக்காலம் 240 முதல் 250 நாட்களாகும். ஒரு குட்டியை மட்டுமே ஈனும். அடைப்பிடங்களில் 23 வருடங்கள் வரை வாழும்.

சதுப்பு நிலங்கள் அழிப்பு, ஆறுகள் அழிப்பு, சதுப்பு நிலங்களில் வண்டல் மண் படிதல், வாழ்விடங்களில் மேய முடியாத அன்னிய தாவரங் கள் ஆக்கிரமிப்பு, வேட்டை போன்ற காரணங்களால் இந்த மான்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

வன உயிரின (பாதுகாப்பு) சட்டம் 1972 அட்டவணை 1-ன்படி சதுப்பு நில மான்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாகும்.

இவ்வாறு பூங்கா இயக்குனர் ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளார்.

Similar News