செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் விமானி வராததால் அந்தமான் செல்லும் விமானம் தாமதம்

Published On 2016-07-03 07:26 IST   |   Update On 2016-07-03 07:26:00 IST
விமானத்தை இயக்க வேண்டிய விமானி வராததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு காலை அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது
ஆலந்தூர் :

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து அந்தமானுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு விமானம் செல்ல இருந்தது. அதில் பயணம் செய்ய 148 பேர் சோதனைகளை முடித்துக்கொண்டு ஓய்வறையில் காத்திருந்தனர்.

ஆனால் காலை 6 மணி வரை பயணிகள் யாரையும் விமானத்தில் ஏற்றப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், கோஷங்களை எழுப்பினார்கள். உடனே விமான நிறுவன அதிகாரிகள் வந்து பயணிகளை சமாதானம் செய்தனர்.

விமானத்தை இயக்க வேண்டிய விமானி வராததால் விமானம் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதாகவும், மாற்று விமானி வரவழைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து சுமார் 3 மணி நேர தாமதத்துக்கு பிறகு காலை 8.15 மணிக்கு அந்தமானுக்கு விமானம் புறப்பட்டு சென்றது. இதனால் விமான நிலையத்தில் 3 மணி நேரத்துக்கு மேலாக பயணிகள் அவதி அடைந்தனர்.

இதேபோல் கொழும்பு, டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கு செல்ல வேண்டிய விமானங்களும் 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதற்கான காரணங்களை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை.

Similar News