சித்தோடு அருகே வாகனத்தை நிறுத்தி பணம் பறிக்க முயன்ற 5 பேர் கைது
ஈரோடு:
கோவை மாவட்டம், குனிய முத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சலீம் பாட்ஷா (வயது 33). கால்நடை வியாபாரியான இவர் கர்நாடக மாநிலம், மாண்டியாயில் 9 எருமைகளை வாங்கி ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டு கோவை திரும்பிக் கொண்டிருந்தார். வாகனத்தை இம்ரான் ஓட்டிச் சென்றார்.
சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் சித்தோடு புறவழிச்சாலை அருகே சென்ற போது, இவர்களின் வாகனத்தை ஜீப்பில் வந்த ஒரு கும்பல் வழி மறித்து நிறுத்திய தோடு, மாடுகளுடன் செல்ல வேண்டுமானால் பணம் தர வேண்டும் என மிரட்டியுள்ளது.
அப்போது அந்த வழியே ரோந்து சென்ற சித்தோடு போலீசார் சென்று விசாரித்த போது, பணம் கேட்டு மிரட்டிய அக்கும்பல் தப்பி ஓட முயன்றது.
இதையடுத்து, போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். கடலூர் மாவட்டம், விருதாச்சலம் அடுத்த மங்கலம் பேட்டை கோவிலானூரை சேர்ந்த செந்தில் (38), ரமேஷ்குமார் (31), வினோத் வின்சென்ட் பவுல் (21), ராஜுலூ (28), உளுந்தூர் பேட்டை அஜிஸ் நகரைச் சேர்ந்த வின்னிக் குமார் (41) என்பது தெரிந்தது.
இதையடுத்து, சலீம் பாட்ஷா கொடுத்த புகாரின் பேரில் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.