செய்திகள்

கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Published On 2016-06-24 19:01 IST   |   Update On 2016-06-24 19:01:00 IST
கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.

கடலூர்:

கடலூர் புதுப்பாளையம் மணலி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கடலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ படித்து முடித்துள்ளார்.

அதேபகுதியைச் சேர்ந்தவர் சம்பத்(25). தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சரண்யாவுக்கும், சம்பத்துக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது.

கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். சரண்யாவும், சம்பத்தும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள். எனவே இவர்களது திருமணத்திற்கு இருவரின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 22–ம் தேதி சரண்யாவும், சம்பத்தும் வீட்டைவிட்டு வெளியேறினார்கள். பெற்றோருக்கு தெரியாமல் தஞ்சை பெரியநாயகி கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் இன்று காலை கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்க்கு இருவரும் வந்து தஞ்சம் அடைந்தனர். இதுதொடர்பாக சரண்யா கூறியதாவது:–

நானும், சம்பத்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என்பதால் எங்களது திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிக்க வில்லை. எங்களது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு மனு அளித்தார்.

Similar News