செங்கல்பட்டில் ரவுடி அடித்துக் கொலை: போதகர்–மகன் உள்பட 5 பேர் கைது
செங்கல்பட்டு:
செங்கல்பட்டை அடுத்த திருமணி பகுதியை சேர்ந்தவர் ஆசீர்வாதம் (வயது 40) ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.
நேற்று காலை ஆசீர்வாதம் குடிபோதையில் திருமணி கே.கே.நகரில் உள்ள தேவாலயத்துக்கு சென்று ரகளையில் ஈடுபட்டார்.
இதனை கண்டித்த போதகர் இம்மானுவேல் பிரகாஷ் மற்றும் பிரார்த்தனைக்கு வந்தவர்களை ஆசீர்வாதம் கத்தியை காட்டி மிரட்டினார். மேலும் போதகர் இம்மானுவேல் பிரகாசிடம் மாமூல் கேட்டு எச்சரித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அங்கிருந்தவர்கள் ரவுடி ஆசீர்வாதத்தை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை கட்டி வைத்து கற்கலால் தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ஆசீர்வாதம் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து செங்கல்பட்டு தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்து போதகர் இம்மானுவேல் பிரகாஷ், அவரது மகன் மனோபால் பிரகாஷ், இம்மானுவேல் பிரகாசின் தம்பி ஜோயல் பிரகாஷ், கருணாகரன், லோகிதாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
அவர்கள் மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கைதான போதகர் இம்மானுவேல் பிரகாஷ் உள்பட 5 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.