அரக்கோணம் அருகே ஆட்டோ-வேன் மோதல்: 4 பேர் படுகாயம்
அரக்கோணம்:
அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி வேன் ஒன்று நேற்று இரவு நேதாஜி நகர் அருகே சென்றுக் கொண்டிருந்தது. அப்போது சாலை பகுதியில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்ற ஷேர் ஆட்டோ எதிரே வந்த வேனுடன் மோதியது.
இந்த விபத்தில் கும்பினிபேட்டையை சேர்ந்த பிரசாந்த்குமார் (வயது 19), தயாநிதி (29), தண்டலம் மேட்டுகாலனியை சேர்ந்த பன்னீர்செல்வம் (52), மணி என்பவரின் மகள் பிரவீனா (12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பன்னீர்செல்வம், பிரசாந்த்குமார் ஆகியோர் சென்னை அரசினர் பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அரக்கோணம் கும்பினிபேட்டை இடையே அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சாலைகளில் தேவையான மின்விளக்குகள் இல்லை. மேலும் சாலைகளில் இருந்த வேகத்தடைகளை நீக்கி விட்டனர். எனவே வேகத்தடை அமைக்கவும், நெடுஞ்சாலை அருகே தேவையான மின்விளக்குகள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.