செய்திகள்

செங்கல்பட்டில் போதகரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கல்லால் அடித்துக் கொலை

Published On 2016-06-19 14:06 IST   |   Update On 2016-06-19 14:06:00 IST
செங்கல்பட்டில் இன்று காலை போதகரை கத்தியை காட்டி மிரட்டிய ரவுடியை பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டை அடுத்த திருமணி பகுதியைச் சேர்ந்தவர் ஆசீர் என்கிற ஆசீர்வாதம். ரவுடி. இவர் மீது கொலை, வழிப்பறி வழக்குகள் உள்ளன. லாரியை மறித்து டிரைவரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசீர்வாதம் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஜெயிலில் இருந்து வெளியே வந்திருந்தார்.

இன்று காலை ஆசீர்வாதம் குடிபோதையில் திருமணி கே.கே.நகர் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார். அங்கு போதகர் பிரகாஷ் என்பவர் தனது வீட்டின் ஒரு பகுதியில் சிறிய தேவாலயத்தை நடத்தி பிரார்த்தனை செய்து வருகிறார்.

இன்று காலை பிரார்த்தனைக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது போதையில் இருந்த ரவுடி ஆசீர்வாதம் தேவாலயத்துக்குள் கத்தியுடன் புகுந்தார். போதகர் பிரகாஷை கத்தியை காட்டி, தனக்கு தினமும் மாமூல் தர வேண்டும். இல்லையென்றால் குத்தி கொன்று விடுவேன் என்று மிரட்டினான்.

இதை பார்த்த பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆசீர்வாதத்தை வெளியே செல்லும்படி கூறினார்கள். ஆனால் அவர் தொடர்ந்து போதகரை மிரட்டியபடியே இருந்தார்.

உடனே அவரை அங்குள்ளவர்கள் பிடித்தனர். அவர்கள் மீது கத்தியை வீசிய ஆசீர்வாதம் தன்னை பிடித்தால் அனைவரையும் கொன்று விடுவேன் என்று மிரட்டியபடி தேவாலயத்துக்கு வெளியே வந்தார்.

பயந்து போன பிரார்த்தனைக்கு வந்தவர்கள் கற்களை எடுத்து ஆசீர்வாதம் மீது சரமாரியாக வீசி தாக்கினார்கள். இதில் அவரது தலை, மார்பு பகுதிகளில் கற்கள் பலமாக தாக்கியது. சுருண்டு விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ரவுடியை கற்களை வீசி விரட்டும் முயற்சியில் அவர் இறந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த செங்கல்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். ஆசீர்வாதத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்குப்பதிவு செய்தார். இது தொடர்பாக போதகர் பிரகாஷிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ரவுடி கற்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தால் செங்கல்பட்டில் பரபரப்பு நிலவுகிறது.

Similar News