செய்திகள்

புதுக்கோட்டை அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் கொலை: அரசு பஸ் கண்டக்டரை பிடித்து விசாரணை

Published On 2016-06-14 16:28 IST   |   Update On 2016-06-14 16:28:00 IST
புதுக்கோட்டை அருகே பெண் சத்துணவு அமைப்பாளர் கொலை தொடர்பாக அரசு பஸ் கண்டக்டரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ரெகுநாதபுரத்தை சேர்ந்தவர் துரைச்சாமி. இவரது முதல் மனைவி துளசியம்மாள் (வயது 47). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற துளசியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆத்தங்கரை விடுதி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தைலமரக்காட்டில் ஒரு மண்டை ஓடும், அதன் அருகே இளஞ்சிவப்பு நிறத்தில் சேலையும் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்ட போது, அங்கு இறந்து கிடந்தது துளசியம்மாளின் மண்டை ஓடு என்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அவர் எப்படி இறந்தார் என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் துளசியம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. அவரை கொலை செய்த மர்ம நபர்கள் யார்? என்று கண்டுபிடிப்பதற்காக துளசியம்மாளின் செல்போன் எண்ணை கடைசியாக தொடர்பு கொண்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

அதில் இடையாத்தியை சேர்ந்த அரசு பஸ் கண்டக்டர் ஜெயபால் (37) என்பவர் பேசியது தெரிய வந்தது. அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், ஜெயபாலுக்கும், துளசியம்மாளுக்கும் இடையே பழக்கம் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் தன்னுடன் சேர்ந்து வாழுமாறு ஜெயபாலை துளசியம்மாள் வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சினை காரணமாக துளசியம்மாளை ஜெயபால் கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News