செய்திகள்

அறந்தாங்கி அருகே மனைவியை பிரிந்து வாழ்ந்த ஊராட்சி செயலர் மர்மச்சாவு

Published On 2016-06-12 10:45 IST   |   Update On 2016-06-12 10:45:00 IST
அறந்தாங்கி அருகே ஊராட்சி செயலர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள கருங்குழிகாடு பகுதியை சேர்ந்தவர் முத்துசெல்வன் (வயது 40). மேல்மங்கலம் ஊராட்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அஞ்சம்மாள் (38). இவர்களுக்கு சுந்தர்ராஜன் (16) என்ற மகனும், முத்துமீனா (14) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அஞ்சம்மாள், முத்துசெல்வனுடன் கோபித்து கொண்டு திருநாலூரில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். அங்கு கடந்த 4 ஆண்டுகளாக தனது மகன் சுந்தர்ராஜனுடன் வசித்து வருகிறார். முத்துசெல்வன் தனது மகள் முத்துமீனாவுடன் கருங்குழிகாட்டில் வசித்து வந்தார்.

மேலும் மனைவியுடன் விவாகரத்து கேட்டு புதுக்கோட்டை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்தநீதிபதி, இருவரும் சேர்ந்து வாழும்படி கடந்த 2வாரங்களுக்கு முன்பு உத்தரவிட்டார். இருப்பினும் முத்துசெல்வனுக்கு மனைவியுடன் வாழ விரும்பவில்லை. இது தொடர்பாக தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் கூறி வந்துள்ளார்.

நேற்றிரவு வீட்டிற்கு வந்த முத்துசெல்வன், வீட்டை பூட்டி விட்டு தூங்கி விட்டார். இன்று காலை வீட்டின் கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் வீட்டிற்கு சென்று பார்த்த போது முத்துசெல்வன் வீட்டிற்குள் தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார்.

இது குறித்த தகவல் அறிந்ததும் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

முத்துசெல்வன் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. மனைவியுடன் சேர்ந்து வாழ விரும்பாததால் தூக்குபோட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

அவரது உறவினர்கள் முத்துசெல்வன் சாவில் மர்மம் உள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தனர். அது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஊராட்சி செயலர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News