செய்திகள்

கோவில் நிகழ்ச்சியில் பல்லி விழுந்த பிரசாதம் சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

Published On 2016-06-11 09:24 IST   |   Update On 2016-06-11 09:24:00 IST
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த காடைஇடையாத்தூரில் மாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் பல்லி விழுந்த பிரசாதத்தை சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு ஏற்பட்ட வாந்தி மயக்கத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்
அறந்தாங்கி :

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த காடைஇடையாத்தூரில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் நடத்தி, பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று இரவு வழிபாடு முடிந்த பின்பு பக்தர்களுக்கு பிரசாதமாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. இதை முதலில் குழந்தைகள் பெற்று சாப்பிட்டனர். பொங்கலை சாப்பிட்டவுடன் அவர்களுக்கு வாந்தி – மயக்கம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், மீதமிருந்த சர்க்கரை பொங்கலை பார்த்துள்ளனர். அப்போது அதில் இறந்த நிலையில் ஒரு பல்லி கிடந்தது.

உடனே மயக்கம் அடைந்த சிறுவர்கள் பரத், மகத்,ஸ்ரீராம்,மகிசா, ஸ்ரீராகவன்,ஜனா, சபரி,மஞ்சு, சந்தோஷ், மாதேஷ் உள்ளிட்ட 13 குழந்தைகளையும், பிரவினா என்ற பெண்ணையும் மீட்டு சிகிச்சைக்காக நாகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி செய்யப்பட்டு, மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவில் நிகழ்ச்சியில் பல்லி விழுந்த சர்க்கரைபொங்கலை சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News