செய்திகள்

தம்பியை கொலை செய்த அண்ணணுக்கு ஆயுள் தண்டனை நாகை கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-06-04 17:19 IST   |   Update On 2016-06-04 17:19:00 IST
நாகை மாவட்டம் பொறையாறு அருகே தம்பியை கொலை செய்த அண்ணணுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாகை கோர்ட்டு தீர்ப்பளித்தது.

நாகப்பட்டினம்:

நாகை மாவட்டம் பொறையாறு சின்னூர்பேட்டை மேலதெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது56). அதே பகுதியில் இவருடைய தம்பி ஆறுமுகம் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த 2010–ம் ஆண்டு மே 8–ந்தேதி ஆறுமுகம் தனது மனைவி அஞ்சம்மாளுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த கண்ணதாசனுக்கும், ஆறுமுகத்துக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கண்ணதாசன் தனது கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து ஆறுமுகத்தை குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவரை காரைக்கால் மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொறையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நாகை மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி சிவகுமார், கண்ணதாசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் அபராதம் கட்ட தவறினால் ஓராண்டு கடுங்காவல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

Similar News