குத்தாலம் அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல்: 17 பேர் மீது வழக்கு
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் அருகே திருமணஞ்சேரி வெள்ளாளத் தெருவை சேர்ந்த ரவிச்சந்திரன் மனைவி ரேவதி (வயது 38). இவருடைய மகன் சிரஞ்சீவி. இவர், நேற்றுமுன்தினம் திருமணஞ்சேரி அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் உள்ள பம்புசெட்டில் தனது மினி ஆட்டோவை கழுவி கொண்டிருந்தார். அப்போது அவர் தனது நண்பர்களிடம் தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது.
அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரத்தின் மனைவி சுமதி, மகள் செல்வியுடன் சென்று கொண்டு இருந்தார். சிரஞ்சீவி பேசியதை கேட்ட சுமதி, அவரிடம் ஏன் தேவையில்லாமல் தகாத வார்த்தைகளை பேசுகிறாய்? என தட்டி கேட்டார். இதனால் சிரஞ்சீவிக்கும், சுமதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அதன்பின்னர் வீட்டிற்கு சென்ற சுமதி, இதுகுறித்து தனது கணவர் கல்யாணசுந்தரம், மகன் செல்வகணபதி ஆகியோரிடம் கூறினார். அதைக்கேட்டு ஆத்திரம் அடைந்த செல்வகணபதி, தனது நண்பர்கள் 10 பேருடன் சேர்ந்து அரிவாள், கத்தி, உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களுடன் சிரஞ்சீவி வீட்டுக்கு சென்றார்.
அப்போது சிரஞ்சீவி வீட்டில் இல்லாததால், அவரது தாய் ரேவதியை திட்டி, தாக்கினர். மேலும் அவர்கள் சிரஞ்சீவிக்கு கொலைமிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த ரேவதி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து ரேவதி கொடுத்த புகாரின் பேரில் குத்தாலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்ததாண்டவம் மற்றும் போலீசார், சுமதி, கல்யாணசுந்தரம், செல்வ கணபதி, தனபால் உள்ளிட்ட 10 பேர் மீதும், செல்வகணபதி (23) கொடுத்த புகாரின் பேரில் சிரஞ்சீவி உள்ளிட்ட 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருதரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மேலும் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணகுமார் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் திருமணஞ்சேரி பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.