செய்திகள்

கோவில் திருவிழா பிரச்சினையால் செல்போன் கோபுரத்தில் ஏறி முதியவர் போராட்டம்

Published On 2016-05-23 16:04 IST   |   Update On 2016-05-23 16:05:00 IST
கோவில் திருவிழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்சினையால் செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய முதியவர் கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது மாரியம்மன் கோவில். இந்த கோவிலை நிர்வகிக்கும் அறங்காவலர் நியமனம் உரிமை தொடர்பாக இரு தரப்பினரிடையே பிரச்சினை இருந்து வருகிறது.

இந்நிலையில் கோவிலில் வழக்கமாக நடைபெறும் ஆண்டு திருவிழாவிற்கான காப்பு கட்டும் நிகழ்ச்சி கடந்த 21–ந்தேதி இரவு நடத்துவதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.

அறங்காவலர் நியமனம் உரிமை பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காத வரை திருவிழா நடத்தக் கூடாது. திருவிழாவை தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கூறியும் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என ஒரு பிரிவைச் சேர்ந்த ராஜரத்தினம் (வயது 70) மருதூர் தெற்கு கடை வீதியில் அமைந்துள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டினார்.

தகவலறிந்த வாய்மேடு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து முதியவரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்ததும் அவர் செல்போன் கோபுரத்திலிருந்து இறங்கி வந்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவதாஸ் தற்கொலைக்கு முயன்றதாக ராஜரத்தினம் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்.

Similar News