சிதம்பரத்தில் அ.தி.மு.க. தொண்டர் செல்போன் டவரில் ஏறி போராட்டம்: தி.மு.க.வுக்கு வாக்களிக்க கூடாது என கோஷம்
சிதம்பரம்:
சிதம்பரம் தில்லை விடங்கன் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 45), அ.தி.மு.க. பிரமுகர். இவர் இன்று காலை 7 மணி அளவில் வண்டிகேட் பகுதியில் உள்ள செல்போன் டவரில் ஏறினார்.
அவர் கையில் வைத்திருந்த பேனரில் இலங்கை இனப்படுகொலைக்கு காரணமாக இருந்த தி.மு.க.வையும், நிருபர் கவிப்பிரியா படுகொலைக்கு காரணமாக இருந்த காங்கிரசையும் இந்த தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். ஊழல் கட்சிகளான இந்த கூட்டணிக்கு மக்கள் இந்த தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற வாசகம் இருந்தது.
மேலும், வருகிற சட்டசபை தேர்தலில் மக்கள் யாரும் தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிக்க கூடாது என கோஷம் எழுப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சிதம்பரம் நகர போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மகேந்திரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி கீழே இறங்குமாறு கூறினர்.
பின்னர் தீயணைப்புதுறையினர் மகேந்திரனை பத்திரமாக கீழே இறக்கினர். போலீசார் மகேந்திரனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.