செய்திகள்

நெய்வேலியில் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி

Published On 2016-04-24 23:05 IST   |   Update On 2016-04-24 23:05:00 IST
நெய்வேலியில் பெண்ணிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்தது தொடர்பாக தாய்-மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெய்வேலி

நெய்வேலி 27-வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்தவர் அப்துல் ஜபார் மனைவி ரமாதேவி(வயது 51). இவர் தனது பிள்ளைகளின் படிப்பு செலவுக்காக விழுப்புரத்தில் உள்ள வீட்டை உதயகுமார் என்பவருக்கு ரூ.19 லட்சத்துக்கு விலைபேசி முன்பணமாக ரூ.5¾ லட்சத்தையும் வாங்கியுள்ளார்.

பின்னர் மீதி பணத்தை உதயகுமாரிடம் ரமாதேவி கேட்டபோது வீட்டை தனக்கு பதிவு செய்து தாருங்கள் அல்லது முன்பணத்தை வட்டியுடன் ரூ.7 லட்சம் தர வேண்டும் என உதயகுமார் கூறினார். இதையடுத்து ரமாதேவி தனது குடும்ப நண்பரான நெய்வேலி இந்திராநகர் மாற்றுக்குடியிருப்பை சேர்ந்த அந்தோணியம்மாள் மகன் தேவராஜிடம் பணத்தை கொடுத்து அனுப்பினார்.

ஆனால் தேவராஜ் அந்த பணத்தை கொடுக்காமல் 2 காசோலைகளை உதயகுமாரிடம் வழங்கினார். அந்த காசோலைகளை வங்கியில் பணமாக்க முயன்றபோது பணம் இல்லை என தெரியவந்தது. உடனே உதயகுமார் ரமாதேவியிடம் தொடர்பு கொண்டு பணத்தை கேட்டார். அப்போதுதான் தேவராஜ் ரூ.7 லட்சத்தை மோசடி செய்தது ரமாதேவிக்கு தெரியவந்தது.

இதை தட்டிக் கேட்ட ரமாதேவியை தேவராஜ் செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் நிலையத்தில் ரமாதேவி புகார் கொடுத்தார். அதன் பேரில் தேவராஜ், மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அந்தோணியம்மாள் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News