செய்திகள்

கடலூர் சிறையில் வார்டனை தாக்கி விட்டு 5 சிறுவர்கள் தப்பி ஓட்டம்

Published On 2016-04-23 17:36 IST   |   Update On 2016-04-23 17:36:00 IST
கடலூர் சிறுவர் சிறையில் வார்டனை தாக்கி விட்டு 5 சிறுவர்கள் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்:

கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியில் சிறுவர் சிறை உள்ளது. குற்ற சம்பவங்களில் ஈடுபடும் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் இங்கு அடைக்கப்படுவார்கள்.

தற்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமார் (வயது 17), கோட்டக்குப்பத்தை சேர்ந்த சரத் (17), நெய்வேலி சிவக்குமார் (16), கடலூர் மாவட்டம் காடுவெட்டியை சேர்ந்த அரவிந்தன் (16), கும்பகோணத்தை சேர்ந்த சக்தி (17) உள்பட 50–க்கும் மேற்பட்டோர் இங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.

இந்த நிலையில் இன்று காலை சந்தோஷ்குமார் உள்பட 5 பேரும் சிறையில் இருந்து தப்பி செல்ல முடிவு செய்தனர். இதையடுத்து வார்டன் விஜயகுமாரை திடீரென சரமாரியாக தாக்கினர். மேலும் வார்டனின் கையில் இருந்த லத்தியை பிடுங்கி சரமாரியாக தலையில் தாக்கினர்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். இதையடுத்து வார்டனிடம் இருந்த கூர் நோக்கு இல்லத்தின் சாவியை பிடுங்கிய 5 பேரும் வெளிப்பகுதியில் உள்ள இரும்பு கேட்டை திறந்து தப்பியோடி விட்டனர்.

இது குறித்து அரசு கூர்நோக்கு இல்ல பொறுப்பாளர் சந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் நெல்லிக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அங்கு விரைந்து சென்ற போலீசார் வார்டனை தாக்கி விட்டு தப்பியோடிய 5 பேரையும் தேடி வருகிறார்கள். தப்பியோடிய 5 சிறுவர்களும் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்கில் தொடர்புடையவர்கள் ஆவர்.

இதற்கிடையே காயம் அடைந்த வார்டன் விஜயகுமார் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Similar News