சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: மாநகராட்சி ஊழியர் கைது
சிதம்பரம்:
சென்னையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் சேவை மையத்திற்கு கடந்த 17–ந் தேதி செல்போனில் ஒருவர் பேசினார். அவர் அண்ணாமலை பல்கலைகழகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்தார்.
அதிர்ச்சி அடைந்த ஆம்புலன்ஸ் சேவை மையத்தினர் சென்னை போலீஸ் தலைமையகத்தில் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள் சிதம்பரம் அண்ணாமலை நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பல்கலைக்கழகத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனை நடத்தினர். அங்கு வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. எனவே போனில் வந்த தகவல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து செல்போனில் பேசிய மர்ம நபர் யார் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் போனில் பேசியவர் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு மழவராயன் நல்லூர் பகுதியைச் சேர்ந்த சக்திவேல்(வயது 40) என்பது தெரியவந்தது.
உடனே இன்ஸ்பெக்டர் ரமேஷ்ராஜா மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சக்திவேலை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் மும்பை மாநகராட்சியில் வரிவசூல் செய்யும் ஊழியராக பணிபுரிந்து வருவதும், விடுமுறையில் ஊருக்கு வந்தபோது குடிபோதையில் வெடி குண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறினார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.