செய்திகள்

புதுக்கோட்டை அருகே பிறந்த குழந்தையை பார்க்க வந்த வாலிபர் ரெயில் மோதி பலி

Published On 2016-04-20 20:39 IST   |   Update On 2016-04-20 20:39:00 IST
புதுக்கோட்டை அருகே பிறந்த குழந்தையை பார்க்க வந்த தனியார் நிறுவன ஊழியர் ரெயில் மோதி பலியானார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள மேல தேமுத்துப்பட்டி சக்திநகரை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 50). இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சென்னையில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் ராஜசேகர் நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேலதேமுத்துப்பட்டிக்கு அழைத்து வந்தார். பின்னர் மனைவியை ஊரில் விட்டு விட்டு, சென்னை சென்று விட்டார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜசேகரின் மனைவிக்கு குழந்தை பிறந்தது. இதையடுத்து குழந்தையை பார்ப்பதற்காக 2 தினங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்தார்.

இந்நிலையில் இன்று காலை அவர் வீட்டிற்கு தேவையான தண்ணீர் பிடிப்பதற்காக அங்குள்ள குடிநீர் குழாய்க்கு சென்றார். அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தை கடந்து சென்ற போது, அந்த வழியாக வந்த ராமேஸ்வரம்–திருச்சி பயணிகள் ரெயில் ராஜசேகர் மீது மோதியது. இதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் அவரது உடல் 50 அடி தூரத்திற்கு சிதறி கிடந்தது. இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

காரைக்குடி ரெயில் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் ராஜசேகரின் உடல் பாகங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிறந்த குழந்தையை பார்க்க வந்த போது ராஜசேகர் ரெயில் மோதி பலியான சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News