செய்திகள்

குடிபோதையில் தகராறு: அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி

Published On 2016-04-15 17:03 IST   |   Update On 2016-04-15 17:03:00 IST
வேதாரண்யம் அருகே குடிபோதையில் தகராறு செய்த அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற தம்பி.
தலைஞாயிறு:

வேதாரண்யம் தாலுக்கா தலைஞாயிறு ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம் புதுப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர்களது மகன்கள் சூர்யமூர்த்தி (வயது 30),  கார்த்திகேயன் (28). இவர்கள் இருவருக்கும் திருமணமாகவில்லை.  கூலி வேலை செய்து வருகிறார்கள்.

கார்த்திகேயன் எஞ்சின் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார். ராமச்சந்திரன் 2 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். தாயார் சந்திராவுடன் அண்ணன், தம்பி இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்களது தங்கை சுகுணாவை திருமணம் செய்து கொடுத்து விட்டனர்.

இந்நிலையில் அண்ணன், தம்பி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம். சூர்யமூர்த்தி அடிக்கடி குடித்து விட்டு வருவதால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று 2 பேருக்கும் ஏற்பட்ட தகராறில் கார்த்திகேயன் தான் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் சூர்யமூர்த்தியை மார்பில் சுட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் சூர்யமூர்த்தி  சம்பவ இடத்திலேயே இறந்தார்.

புகாரின் பேரில் தலைஞாயிறு போலீஸ் இண்ஸ்பெக்டர் சிவவடிவேல் வழக்கு பதிவு செய்து தலைமறைவான கார்த்திகேயனை தேடி வருகிறார். தகவலறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், உதவி போலீஸ் சூப்பிரண்டு ரோஹித் சர்மா ராஜகோபால், வேதாரண்யம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்.கார்த்திக் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Similar News