செய்திகள்

மீன்பிடி தடைக்காலம் தொடங்கியது: புதுக்கோட்டையில் 700 விசைப்படகுகள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2016-04-15 10:48 IST   |   Update On 2016-04-15 10:48:00 IST
மீன்பிடி தடைகாலம் இன்று முதல் அமலுக்கு வந்ததையடுத்து புதுக்கோட்டை மாவட்டத்தில் 700 விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அறந்தாங்கி:

தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு மீன் பிடி தடைகாலம் இன்று 15-ந்தேதி முதல் மே மாதம் 30-ந்தேதி வரை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை காலங்களில் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் கடலில் மீன் பிடிக்கக் கூடாது என்று மீன் வளத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இதையடுத்து கிழக்கு கடற்கடை பகுதியில் உள்ள விசைபடகு மீனவர்கள் யாரும் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினத்தில் 700 விசைப்படகுகள் மூலம் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடித்து வருகின்றனர். தடைகாலம் அமலுக்கு வந்ததையடுத்து இன்று முதல் அவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. சுமார் 700 விசைபடகுகளும் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தடை காரணமாக கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் மீன்பிடி தளமானது வெறிச்சோடியது. மேலும் ஐஸ் உற்பத்தி நிலையம், வெல்டிங் பட்டறை என சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.

ஜெகதாப்பட்டினத்தில் தங்கியிருந்து மீன்பிடித்து வந்த நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்னும் சில நாட்களில் மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை கரையில் ஏற்றி பழுது பார்க்கும் பணியில் ஈடுபடுவார்கள். விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் மீன்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Similar News