செய்திகள்

குத்தாலம் அருகே விளையாட்டு மைதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2016-04-12 17:10 IST   |   Update On 2016-04-12 17:10:00 IST
குத்தாலம் அருகே விளையாட்டு மைதானத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க முயன்றதால் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
குத்தாலம்:

நாகை மாவட்டம் குத்தாலம் அருகே நக்கம்பாடியில் 40 சென்ட் நிலப்பரப்பில் விளையாட்டு மைதானம் உள்ளது. இதில் 4.5 லட்சம் மதிப்பில் கிராம மக்கள் தரைதளம் அமைத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் அமைச்சர் கே.ஏ.ஜெயபால் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த இடத்தில் 120 ஆண்டுகள் பழமையான புளிய மரம் ஒன்று இருந்தது. கடந்த மார்ச் மாதம் 1–ந்தேதி சிலர் ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வனத்துறையினரின் அனுமதியின்றி இந்த புளிய மரத்தை வெட்ட முயன்றதை கண்ட கிராம மக்கள் தடுத்து நிறுத்தி விசாரித்துள்ளனர். அப்போது இங்கு 30 லட்சம் மதிப்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து கிராம மக்கள் நாகை மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து இந்த இடம் அரசு உயர்நிலைப்பள்ளி, துவக்கப்பள்ளி, பள்ளிவாசல், கடைவீதி ஆகியவற்றின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால் மாற்று இடத்தில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்குமாறு மனு அளித்துள்ளனர். அப்போது மாவட்ட கலெக்டர் அவர்களிடம் தற்போது தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் முடியும் வரை இந்த இடத்தில் எந்த பணியும் நடைபெறாது. தேர்தல் முடிந்தவுடன் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் தீர்வு காணப்படும் என கிராம மக்களிடம் உறுதிஅளித்துள்ளார்.

இந்நிலையில் வெட்டப்பட்ட புளிய மரத்தை நேற்று ஜே.சி.பி.இயந்திரம் மூலம் ஒப்பந்தகாரர்கள் அகற்ற முயன்றுள்ளனர். இதை கண்ட கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து விரைந்து வந்த பாலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, ஒப்பந்தகாரர்கள் மற்றும் கிராம மக்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் தேர்தல் முடியும் வரை சட்டம்–ஒழுங்கு சீர்கெடாமல் இருக்க அந்த இடத்தில் எந்த பணியும் நடைபெறாது என உறுதிஅளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இந்த பேச்சுவார்த்தையில் நுகர்பொருள் வாணிப கழக உதவிப் பொறியாளர் ராமநாதன், வருவாய் ஆய்வாளர் கவிதாஸ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

Similar News