மயிலாடுதுறை அருகே மோட்டார் சைக்கிளில் ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ. 1¼ லட்சம் பறிமுதல்
மயிலாடுதுறை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் மே மாதம் 16–ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 4 தேதி அறிவித்தது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டது.
கட்சி பிரமுகர்களின் படங்கள் மற்றும் சின்னங்கள் அடங்கிய சுவர் விளம்பரங்களயும், விளம்பரபதாகைகளையும் அகற்ற உத்தரவிடப்பட்டிருந்தது. மேலும் தேர்தல் விதிமுறைகளை மீறி கட்அவுட் வைப்பது, சுவர்விளம்பரங்கள் செய்தால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என தேர்தல் ஆணையத்தால் எச்சரிக்கை விடப்பட்டிருந்து.
மேலும் அரசியல் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் நிலையான கண்காணிப்புகுழு மற்றும் தேர்தல் பறக்கும்படையினர் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களிடம் பணப்பட்டுவாடா நடைபெறுகிறதா என்பது குறித்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே வாணாதிராஜபுரத்தில் தேர்தல் கண்காணிப்புக் குழுவினர் முருகேசன் தலைமையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரை நிறுத்தி சோதனையிட்டதில் அவரிடம் 1 லட்சத்து 17 ஆயிரம் ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது.
இப்பணத்தை ராமகிருஷ்ணன் தனியார் சுயஉதவிக்குழுவிற்கு எடுத்துச்செல்வதாக தெரிவித்தார். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தால் அப்பணத்தை கைப்பற்றிய நிலையான கண்காணிப்புக் குழுவினர் மயிலாடுதுறை தாசில்தார் பெருமாளிடம் ஒப்படைத்தனர்.